Wednesday, December 16, 2009

கசப்பு மருந்து.

சின்னதாய்
காயம்
வலி
துன்பம்
துயரம்
பிரிவு
இழப்பு
தடை
தயக்கம்
இவை தன்
இருப்பை மறந்து
இயந்திரமாய்
மாறாதிருக்க
மனிதக் குழந்தைக்கு
இறைவன் ஊட்டிய
கசப்பு மருந்து.

கயமை
கர்வம்
கோபம்
பொறாமை
பேராசை
ஆணவப்
பிணிக்கு
ஆண்டவன் அளிக்கும்
அருமருந்து

அன்பு
தூய்மை
நேர்மை
விடாமுயற்சி
தன்னம்பிக்கை
தனைவளர்க்க
தெய்வம்
தரும் மருந்து.
மண்ணில்
மனிதம் காக்கும்
மா மருந்து..

[திருநெல்வேலிக்கே அல்வா! மாதிரி டாக்டர் தேவன் மாயம் அவர்களுக்கு சுரம் கண்டப் போது [சுரவேகத்தில் ?] அழகான காய்ச்சல் கவிதை எழுதியிருந்தார். அதை படித்ததும் எழுதியதுதான் இது.]

Thursday, October 22, 2009

நன்றாகச் செய்க நயந்து.

எத்தொழில் செய்தாலும் இன்பமுண்டு உன்மனத்தை
அத்தொழில் மீதினில் ஆழ்த்திடுக - சத்தியம்
என்றும் தவறா(து) உழைப்பை உரமாக்கி
நன்றாகச் செய்க நயந்து.

எக்காரியம் செய்தாலும் அதில் நம் கருத்தை முழுமையாக செலுத்தி, விருப்பத்துடன் உண்மை மாறாமல் உழைத்தோமானால் அதனால் உண்மையான இன்பமும் பலனும் உண்டு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.]

என்றும் திருநாள் எனக்கு.


ஆடாத காலும் அமைதியுறும் தூக்கமும்
நாடா மனத்தினில் நன்னிறைவும் - சாடாமல்
என்னுடன் சுற்றமும் ஏற்றமுற சூழ்ந்திருந்தால்
என்றும் திருநாள் எனக்கு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.அவரது திருத்தலுக்குப் பின்]
விளக்கம்: [யாருக்குமே சரியா புரியலைங்கறதுனால...]
மக்கள் அனைவருக்கும் திருநாள் , பண்டிகை என்பன மிகவும் கோலாகலமானவை.ஆனால் முதுமையில் ஒருவருக்கு எது திருநாளாக அமையும். இந்த தீபாவளியில் முதியவர் பட்டாசு சத்தத்தில் எவ்வளவு கஷ்டபட்டிருப்பர் என எண்ணியதில் எழுதியது இப் பா.
ஓடியாடி திரியும் மக்கள் ஒரு கட்டத்தில் தளர்ந்து தமது எல்லைச் சுறுங்கி விடும் போது மனம் வலிக்கும். முதுமையில் கால்கள் தள்ளாடும், மனதில் பயம் வரும், இரவில் அமைதியான தூக்கம் குறையும், இன்றய காலகட்டத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இளையத் தலைமுறையினர் முதியோரை கவனித்துக்கொள்வது குறைந்துவிட்டது. முதுமையில் தனிமை மிகக் கொடுமை. இவ்வாறில்லாமல் சுற்றத்தார் சூழ்ந்திருக்க, நடைத் தள்ளாடாமல், அமைதியான தூக்கமும், கலக்கமில்லாத மனமும் அமைந்தாலே அந்நாள் அவர்களுக்கு திருநாளாக அமையும். இப் பா முதியவர் சொல்வதாய் அமைக்காப்பட்டுள்ளது.]

Tuesday, October 13, 2009

நல்லதே நாடுக

இல்லாள் தன்னால் இல்லறம் சிறக்குமே!
நல்லாட் சியினால் நாடுயர்ந் திடுமே!
நல்லதோர் விதையே மரமா கிடுமே!
நல்லெணம் மட்டுமே நமையுயர்த் திடுமே!

அன்புடை வாழ்க்கை

பணிவுடன் உழைப்பாய் புகழுடன் உயரவே!
துணிவுடன் எழுவாய் துயர்தனை வெல்லவே!
அணியுடன் சேர்ந்தே அழகாம் செய்யுளே!
கருத்துடன் கருமம் சிறக்கும் என்றுமே!
கரும்புடன் இனிப்பு கலந்தே இருக்குமே!
விரும்பியே வினைச்செய விளையும் நன்மையே!
நன்மையேச் செய்திட நானிலம் வாழுமே!
அன்பினைக் காட்டியே ஆளுவோம் மனதையே!

Friday, September 25, 2009

விழி திறந்து காட்டுவழி - இணைக்குறள் ஆசிரியப்பா


இப்படம் திரு.தீபச்செல்வன் அவர்களின் http://deebam.blogspot.com/ வலையிலிருந்து எடுத்தாளப்பட்டது. இப் பா அவரது முகத்தை மூடிக் கொள்கிற குழந்தை என்ற கவிதைக்கு பின்னூட்டமாக எழுதபட்டது. இப் படம் எடுக்கப்பட்டச் சூழல் அவர் வரிகளிலேயே!!! (விடுதலைப் புலிகளது கட்டாய ஆட்சேட்பிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்காகத் திருமணம் செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு/தம்பதிகளுக்குப் பிறந்த இந்தக் குழந்தை 20.09.2009 அன்று கைதடி தடுப்பு முகாமிலிருந்து விடுவிப்பதற்கு சற்று முன்னதாகக் காத்துக்கொண்டிருந்தப் பொழுது இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டது.)

கண்ணை மூடிக் கொண்டது ஏனோ?
கண்ணேயுன் கண்ணின் வெளிச்சமிம்
மண்ணின் இருளில்
மறைந்திடா திருக்கவோ?
சொந்த மண்விட்டுன்
செல்லப் பெயர்மறந்(து)
அடையாளங் காட்டி
அழைக்கப் படுதலின் அவலமோ? நீயுன்
அல்லிவிழி மூடிக் கொண்டது?
பதுங்குக் குழியின் இருட்டை சற்றே
மறந்துவிடு கண்ணே!
திறந்துவிடு உன்கண்ணை
பரவவிடு வெளிச்சம்
விழிகளைத் திறந்தே
வழிதனைக் காண்! ஈழத் தமிழர்
இழிநிலை மாற
விலக்குன் கைகளை இலக்கினை எட்டவே!

Sunday, September 20, 2009

பாரதி தாசன் - [ இணைக்குறள் ஆசிரியப்பா ]



புரட்சி புலவன் பாரதி தாசன்

பரந்த உலகினில்

பொருட்களை எல்லாம்

பொதுவாய் வைத்திடும்

புதுமைச் சொன்னான்..

உழைப்பின் பலனெலாம்

உழைப்பவர் தமக்கே உரிமையாம் என்பதை

உரக்கச் சொன்னான்...

நன்றாம் அவன்நமை நாடச் சொல்லும்

ஒன்றாய் உளஞ்சேர்

காதல் திருமணம்,

கைம்பெண் மறுமணம்,

மண்ணில் மாந்த ரெல்லாம்

ஒன்றெனும் சமத்துவம், சகோத ரத்துவம்..

இன்னும் நம்மிடை இருக்கும்

மூடப் பழக்கம்

மிதிக்கச் சொன்னான்,

பகுத்தறி வாலதைப் போக்கச் சொன்னான்..

பெண்ணைச் சமமாய் மதித்திட

கண்ணாய்த் தமிழைக் காத்திட

கருத்தில் நேர்மை

கருணை கண்ணியம் கலந்தே தந்தான்

விருந்தாய் அருந்தமிழ்..

அறிந்தே நாமதைச்

சுவைப்போம், மகிழ்வோம், நற்றமிழ்

சுவைப்போல் அவன்புகழ் வாழ்க! வளர்கவே!

செல்வம் நிலையாமை - [ இணைக்குறள் ஆசிரியப்பா]

இன்றுளது நாளை இல்லா தாகும்
வண்டிச் சக்கரமாய்
வாழ்க்கைச் சுழலும்
வீழ்ச்சியும் எழுச்சியும் என்றும் தொடரும்
மாறும் யாவும்
மனிதர் வாழ்வினில்
வறியர் செல்வர், செல்வர்
வறியர் ஆவர்
அறிவாய் செல்வம் நிற்காது நிலைத்தே!

Saturday, September 19, 2009

பாரதி - [ நிலைமண்டில ஆசிரியப்பா ]


அஞ்சி நடுங்கிய அடிமை நாட்டில்
நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறனும்
கொஞ்சும் தமிழும் கொண்டே பிறந்தவன்..
சிந்தை யிழந்த சிறுமதி யாளர்
நீசர் காலடி நித்தம் வணங்கிட,
நாசக் காரர் நம்மில் சிலரின்
நெஞ்சை உடைத்து நேர்மை புகுத்தி,
அஞ்சியோர் மனதில் ஆண்மை வளர்த்து,
நாட்டுப் பற்றை நரம்பில் ஏற்றி,
பாட்டின் வரியில் பகையை மிரட்டிய
அச்சம் தவிர்த்த ஆண்மையே பாரதி!
அகந்தை இல்லா அறிவே பாரதி!
கண்ணன் பாட்டில் காதலைத் தேடி
குயிலின் பாட்டில் ஞானம் கண்டவன்..
வறுமை அவனை வாட்டியப் போதும்
சிறுமைக் கொள்ளாச் சிந்தைப் பெற்றவன்..
காலன் வந்தப் போதும் அவனைக்
காலால் மிதிக்க கர்வம் கொண்டவன்
காக்கையும் குருவியும் நம்மின மென்றே
பார்த்திடும் அவன்வழி பகைவனுக் கருள்வது..
ஏற்றதை நாமும் இனித்தொடர்ந் தென்றும்
போற்றுவோம் அவன்புகழ் வாழ்க! வளர்கவே!

Monday, September 14, 2009

தமிழ்த்தாய் வாழ்த்து. - [நிலைமண்டில ஆசிரியப்பா.


தாயே வாழ்க! தமிழே வாழ்க!
தாயே வாழ்க! தமிழர் வாழ்க!
தரணியில் எங்கும் தகவுடன் வாழ்க!
சுரண்டிடும் பேய்கள் சூழ்கலி நீங்கி
தமிழகம் வாழ்க! தன்னலம் நீக்கி
தமிழர் எழுக! தாயும் வாழ,
தன்னினம் வாழ, தமிழா எழுக!
இன்னல் யாவும் இன்றொடு முடிக!
கண்ணுங் கருத்தாய் கற்றே தமிழை
விண்ணும் அளந்திட வழிசெய் திடுக!
ஆய்ந்தே அறிவியல் அனைத்தும் அறிக!
தேய்ந்திடா வண்ணம் தமிழைக் காக்க
கலைச்சொல் ஆக்கியே கருத்துடன் சேர்த்தே
கலைகள் யாவும் கற்பீர் தமிழில்
அயல்மொழி நீக்கியே அழகாய் எழுதிட
இயல்பாய்த் தமிழில் இனிதாய்ப் பேசிட
தங்கும் தமிழும், சற்றும் தொய்விலா[து]
எங்கும் புகழோ[டு] உயர்ந்தே வளமுற
தமிழர் வாழ்க! தமிழகம் வாழ்க!
தமிழ்த்தாய் சிறப்புடன் வாழ்க! வாழ்கவே!


கந்தனே அருள்வான். - [ நிலைமண்டில ஆசிரியப்பா]



அழகனை முருகனை அருந்தமிழ்த் தலைவனை
பழகிடும் தமிழின் பற்பல சொற்களாய்
விளங்கிடும் வேலனை வெற்றியை வேண்டியே
கலக்கம் நீக்கிக் கருத்தினைச் சேர்த்தே
சிந்தனை தமிழாய் செயல்களும் தமிழ்க்காய்
எந்தமிழ்க் கந்தனை என்றும்நாம் வணங்கிடத்
தந்தருள் புரிவான் தங்கிடும் புகழும்
செந்தமிழ் தன்னுடன் சிறப்புற நமக்கே!

தருவதே மேலாம். - [ நேரிசை ஆசிரியப்பா]


தங்கும் தண்ணீர்த் தாகம் தீர்க்காது,
எங்கும் வளமுற இருகரை தன்னில்
பாயும் ஆறோ பருகத் தருமே
ஈயும் கடலில் இரண்டறக் கலந்தும்
மீண்டும் மழையாய் எங்கும் பொழிந்தே!
யாண்டும் அதுபோல் பணமும் கொடுக்கும்
நேராய் பெற்றதை நிறைவோ[டு] ஈந்திட
பாராய் நெஞ்சினில் பெருகும் நிம்மதி
தேராய் என்றும் தருவதே மேலாம்!
ஈயாப் பொருளோ இருந்தே அழியும்
பேயாய் மனதில் பயமும் வளரும்
தாராய் என்றும் தங்கிடும் அமைதியென்[று]
ஊராய்ச் சென்றே உள்ளம் உருக
இறைவனைத் தொழுதிடல் வேண்டா
இரப்பவர்க் கென்றும் ஈவர் தாமே!


கண்ணோரம் கண்ணீர்க் கடல்

மடிக்கிடந்து கையெடுத்து மார்பணைத்த தன்மகனைப்
படிக்கவென்று பள்ளியிலே விட்டுவிட்டு வாசலிலே
கண்வைத்துக் காத்திருக்கும் கற்றறிந்த பெற்றவளின்
கண்ணோரம் கண்ணீர்க் கடல்.

Saturday, September 12, 2009

பாட்டில் பாடம் - [நேரிசை ஆசிரியப்பா]

திரு.பாத்தென்றல் முருகடியார் அவர்களின் [http://pathenralmurugadiyan.blogspot.com/2009/09/blog-post.html 'எண்ணம்மா எண்ணு' என்றப் பாடலுக்கு பின்னூட்டமாக எழுதியது. [முதலில் அப்பாடலைப் படிக்கவும்]

அய்யா வணக்கம்! அன்னைத் தமிழில்
கொய்யா கனிதாம் குழந்தைகட் கெல்லாம்
பாடி பாடிப் பாடம் சொன்னீர்,
பாடி யாடிப் படித்திட் டாலே
பாடம் யாவும் பதியும் மனதில்.
பள்ளிக் குழந்தைகள் போடும் கணக்கு
பாசத் தோடு பண்பைக் கொடுக்கும்
பொல்லாக் கணக்கும் புரிந்திடும் அவர்க்கு
எல்லா கலையும் எளிதாய்க் கைவரும்
பிள்ளைகள் எல்லாம் பேரன் போடு
ஊட்டிடுஞ் சோறுணல் ஒப்ப
பாட்டிலே கணக்கைப் படித்திடு வாரே!

இலங்கையில் இனி - [நேரிசை ஆசிரியப்பா]

திரு. தமிழநம்பி அவர்களின் [http://thamizhanambi.blogspot.com/2007/12/blog-post.html] ஒர் தமிழ்ச்செல்வன் உயிர் ப்றித்தாலென்? ' என்ற அவரது பாவினுக்கு பின்னூட்டமாக எழுதியது.[முதலில் அப்பாடலைப் படிக்கவும்.]


அருந்தமிழ் உணர்வுடை அன்புநெஞ் சத்தீர்!
பெரும்படை கொண்டேப் பீழைச் செய்தனர்
கடுங்கல் நெஞ்சினர், கற்றும் அறியார்,
கொடுஞ்செயல் புரிந்ததும் கும்மாள மிட்டனர்.
பகைவனுக் கருளும் பண்புடைக் கருத்தினைப்
பகைவளர் பண்பினர் பாவம் அறியார்
இருளும் ஒளியும் இயற்கையின் நிகழ்ச்சி
மருளாவே வேண்டா மனிதம் விழித்திடும்
முன்புநம் மண்ணில் முன்னவர் அழிந்தனர்
இன்றுநாம் விடுதலை இன்றியா வாழ்கிறோம்?
கொன்றுநாம் அழித்போம் களைதனை என்றால்
நன்றுதாம் சுதந்திரம் நம்முடை நாட்டில்
சிந்தியச் செந்நீர் சிங்கள மண்ணிலும்
வந்திடும் ஓர்நாள் வெற்றியைச் சூடியே,
அந்தியும் சாய்ந்திடும் ஆங்கே
வந்திடும் தமிழர் வாழ்வினில் விடியலே!

Sunday, September 06, 2009

கற்றவர் வாரீர். - [ ஆசிரியப்பா ]

எடுமின் வாளை இடுமின் முழக்கம்
கடுங்கதிர் வெய்யோன் காரிருள் தன்னைக்
கெடுத்திடல் கண்டோம், பொறுத்திடல் வேண்டா
சிற்றெரும்பும் யானையைச் சினத்தொடு கொல்லும்.
கற்றவர் வாரீர் கல்லாமை இருளை
இல்லாது அழிப்போம், கல்வி
கல்லாதார் இல்லாத காலம் கனியவே.

ஆசிரியப்பா - மழலையர் சிரிப்பு.

நிலவும் வானில் தேயும் மற்றந்த
மலரும் தினமும் வாடும் தீஞ்சுவை
அமிழ்தும் சிறிதே ஈடாம்
தமிழ்தாம் மழலையர் சிந்தும் சிரிப்பே.

Tuesday, September 01, 2009

தூங்கிசைச் செப்பலோசை வெண்பா

கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில்
விண்ணிலே பட்டாய் விரிப்பு,இருளிலே
வெண்ணிலா வானின் வனப்பு; மலர்களே
மண்ணின் வசந்த வெடிப்பு.
[இயைபு தொடையில்]

[நம்முன் மெதுவாக தோன்றும் கருமை, கரியப் பட்டு விரித்ததைப் போல் சட்டென்று பரவ அவ்விருளில் வெண்ணிலா தோன்றுவது வானின் அழகு. அதுபோல் பசுமை போர்த்திய வசந்த காலத்தில் பலவண்ண மலர்கள் மலர்வது மண்ணின் அழகு.

ஆசிரியப்பா

நாளை செய்வோம் நல்லது என்றே
நாளைக் கடத்திடல் நன்றோ! காலம்
வருமுன் காலன் வரலாம்
தருவீர் அனைத்தும் தயங்காது இன்றே.

[நாளைக்குச் செய்துக்கொள்ளலாம் என எந்த ஒரு நற்செயலையும் தள்ளிப்போடக்கூடாது. நம் வாழ்க்கை நிலையானதில்லை. எனவே நற்காரியங்களை உடனே செய்துவிடவேண்டும். இல்லையென்றால் செய்யமுடியாமலே போய்விடலாம்.]

Friday, August 28, 2009

கடி என்ற சொல்லுக்கான வெண்பா

கடிந்தேகு வெள்ளம் கரையைக் கடக்கும்
கடிந்துறு செல்வம் கடுந்தீயாய்க் கொல்லும்
கடிதரு துன்பம் கடிந்துனைச் சேரும்
கடிந்தே மகிழ்வாய்க் கொடுத்து.

விரைவாகவும் அதிகமாகவும் பாயும் வெள்ளம் கரையைக்கடந்து அழிவை ஏற்படுத்தும், அதுபோல் அதிகமான தீயும் அழிவை ஏற்படுத்தும். அதுபோல் மிகுதியாகச் சேர்க்கப்படும் செல்வமும் அழிவை ஏற்படுத்தும்.மேலும் அப்பொருளை பாதுகாக்கும் அச்சமும் அது தரும் துன்பமும் விரைந்து நம்மைச் சேரும். பிறர்க்கு அச் செல்வத்தை கொடுத்து உதவுவதால் நம் அச்சம் தீர்ந்து மகிழலாம்.
கடி என்னும் சொல் விரைவு,மிகுதி,அச்சம்,நீக்கல் என பல பொருள் தரும்.
கடிந்தேகு வெள்ளம்- விரைந்து பாயும் அதிகமான வெள்ளம்
கடிந்துறு செல்வம் - மிகுதியாகச் சேர்க்கப்படும் செல்வம்.
கடிதரு துன்பம் - அச்சம் தரும் துன்பம்
கடிந்தே மகிழ்வாய் - நீக்கியே மகிழ்வாய்.

Wednesday, August 26, 2009

படத்திற்கான பாடல்.வெக்கம் இது வெக்கம்

வெக்கம் இதுவெக்கம் வெம்பசியால் புல்தின்னும்
மக்கள் ஒருபக்கம், வற்றியுடல் சக்கையாய்
கண்ணில் தெரியும் குழந்தை களொருபக்கம்;
விண்தொடும் வீடு வசதியாய் வாகனம்
மண்ணின் மறுபக்கம் வண்ணமிகு வாழ்க்கையதில்
சன்னல் கதவுக்கும் சீலை.

[புகைப்படம் திரு ஞானசேகரனின் 'அம்மா அப்பா' விலிருந்து]

Tuesday, August 25, 2009

படத்திற்கான பாட்டு


சகோதரா சொல்!ஏன் வறுமை விரட்ட
அகோர பசியால்நீ ஆவிபுசித் தாயோ?
நிலமோ நடுங்கியேக்கொல் லுந்தயங் காமல்
பலருயிர் போக்கினையே ஏன்?

மதமா மயக்கிய துன்னை? களிறே
மதமா பிடித்த துனை;நல் இளந்தளிருன்
பிஞ்சு மனதைக் கெடுத்து உனையேக்கொல்
நஞ்சாய் நசுக்கிய தார்?

வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
வாழ்வழிக்க வந்தாயே! வீழ்ந்தோரின் வாழ்வினுக்கு
தக்கபதில் சொல்லிடவே சண்டாளா! சாவுனக்கு
இக்கண மேவரட்டும் சா.

சற்றே மாற்றியப் பின்.

வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
வாழ்வழிக்க வந்தாய் வெறிச்செயலால் வீழ்ந்தோரின்
வாழ்நாள் விலையாயுன் வாழ்விழந்து நின்றுநிலைத்
தாழ்ந்தாய் தகாதனச் செய்து.



Sunday, August 23, 2009

அழகு,பணம், காதல், கடவுள்.

திரு ஞான சேகரன் அவர்கள் இத்தொடர் இடுக்கைக்கு என்னை அழைத்ததன் மூலம் என் சிந்தனைக்கு சற்றே தீனி போட்டிருக்கிறார். அழகு,பணம், காதல், கடவுள் பற்றி சிந்திக்க வைத்துவிட்டார். அவரது பதிவில் தண்ணீர், பசிக்கொடுமை பற்றியெல்லாம் நிறைய அறிந்து எழுதியிருப்பார். அதன் தாக்கத்தால் அவர் எழுதிய சில விடயங்கள் பற்றி பா'எழுத நினைத்ததுண்டு. இப்படி பல விதங்களில் தூண்டுதலாய் அமைந்ததால் அவருக்கு நன்றியுடன்.

பணம்:
அளவாய் இருந்தால் அமுதாய் இனிக்கும்
விளக்கின் ஒளியாய் வெளிச்சம் கொடுக்கும்
பணமும் சினம்போல் சிந்தை அழிக்கும்
கணமும் நெருப்பாய் கனன்று.

[தீயானது அளவோடு அகலில் இருந்தால் வெளிச்சம் கொடுக்கும்.அதுவே அளவுக்கு மீறினால் நெருப்பாய்க் கூரையை எரிக்கும், அதுபோல் பணமும் தேவைக்கு தகுந்தவாறு அளவோடு இருக்க, உதவியாய் இருக்கும், நம் உயிரைக்காக்கும் உணவு போல் நம்மைக்காக்கும். அதுவே மிகுந்தால் நம் சிந்தையை அழித்துவிடும். சிந்தை இழந்தவன் செத்தவன். எனவே நம்மை கொல்லும் பணம். சினமும் அதுபோல் அளவோடு இருக்க வேண்டும்.]

இல்லா திருந்தாலோ வாழ்ககையே இல்லையே
எல்லாம் அதுவேதான் என்றாலுந் தொல்லை
பணமோ பெருகிடும் வெள்ளம் அலையா
மனமோ தடுக்கும் அணை.

பணம் இல்லாதிருந்தால் வாழ்கையில்லை. பணம் என்னும் கருவி யில்லை என்றால் பல காரியங்கள் செய்ய இயலாது. அனால் பணம் செய்வதுதான் முதன்மை என்று கொண்டால், நாம் வாழ்வை மறந்துவிடுவோம். நம் வாழ்வை வளமாக்க பணம் சேர்க்கப் போய் வாழ்வையே இழத்தல் சரியோ?[ BPOவில் வேலை செய்யும் எவ்வளவோ பேர் தனது பெயர்,உடை,உணவு முறை, உறக்கம் என எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு பணம் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். வாழ்வை அறிவதேயில்லை. ] ஆற்றில் வெள்ளம் அளவோருந்தால் பாசனத்திற்கும், மற்றத்தேவைகளுக்கும் பயன் படும். அதுவே பெருகினால் ஊரே அழியலாம். அதை தடுக்க அணை கட்டுகிறோம். அணை நீரை சேமிக்கவும் இல்லாத போது உபயோகிகவும், மிகுந்தால் சீராய் திறந்து பயன்படுத்தவும் உதவும். அதுபோல் போதும் என்ற மனமே நமக்கு பணத்தை சேமிக்கவும்,தேவைக்கதிகமானால் பிறருக்கு கொடுத்து மகிழவும் செய்யும்.

காதல்:
//காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல..//
எவ்வளவு அழகான வரிகள்.
உண்மைதான் காதல் உணரப்படவேண்டியது. மனிதராய் இருப்பவர் யாரும் எப்போதும் உணரக்கூடியது.
காதல் மென்மையானது. மெல்லச் சொல்லுங்கள் இறகைத்தொடுவதுப் போல் மெல்ல உச்சரியுங்கள். அழுந்தச் சொன்னால் உடைந்துப் போய்விடும்.
காதல் என்பது அன்பு என்ற அடித்தளத்தின் மேல் கட்டப்பட்ட இறகாலான, பூவிதழ் பரப்பப்பட்ட மணமிக்க வீடு. அதில் வாழ்வது என்பது மிதப்பது ஆகும்.
காதல்
அவளிருப்பு
அவனிதயத்திலும்
அவனிருப்பு
அவளிதயத்திலும்
பட்டாம்பூச்சிப்
பறக்கச் செய்யும்..
தாழ்ந்த விழி
தரைநோக்க
தனித்தியங்க்கும் நெஞ்சம்
வானவில் பார்க்கும்..

பூவிதழ்
புன்னகை வீச
புகம்பம் வெடிக்கும்
இதயத்தில்

இளமைக்காதல்
இனிமையாயிருக்கும்
உண்மையாயிருந்தால்

மெய்யாயிருந்தால்
மெய்தாண்டி
உயிர்த்தொடும்
கட்டில் தாண்டியும்
கரம் சேரும்..

காலம் கடந்து
காலன் வென்றாலும்
கவிதையாய்
உயிர்த்திருக்கும்.

கடவுள்:
கடவுளும் காதலைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல..

ஆமாம். என்னைப் பொருத்தவரையில் கடவுள் என்பதும் ஓர் உணர்வுதான். ஒவ்வொருவரும் தனித்தனியே அதை உணர வேண்டும். உருவம் கொடுத்து நாம் வழிபடுவதெல்லாம் நம் மனதை நம்ப வைக்கவே.மனம் போகும் வழியிலேயேச்சென்று அதைக்கட்டுப்படுத்த உருவ வழிபாடு உதவுகிறது. எதைச் செய்வதால் அன்பு, அமைதி,உண்மையான நிம்மதி கிடைக்கிறதோ அவையெல்லாம் வழிபாடு. எவையெல்லாம் அதற்குத்துணை ஆகிறதோ அவையெல்லாம் இறைவன். தாய்மை கொடுக்கும் உணர்வுதான் கடவுள். அன்பு என்னும் அருள் தான் கடவுள். உண்மை நேர்மை தூய்மையேக் கடவுள். உண்மையாய் நேர்மையாய் தூய்மையாயிருந்தால் நீயும் கடவுள்.
நாத்திகம் ஆத்திகத்தின் முடிவு.ஆத்திகம் நாத்திகத்தின் முடிவு. அன்பை போதித்ததால் வள்ளளாரும் கடவுள். பலருக்கு அன்பை நல் வழியைக்காட்டியதால் பெரியாரும் கடவுளே.

அழகு:
இந்த உண்மையெல்லாம் உணர்ந்தால் அதுதான் அழகு. உண்மைதான் அழகு. கண்ணில் தெரிவதெல்லாம் உண்மையா? இல்லை. கானல் நீர் கண்ணில் தெரியும் ஆனால் இல்லையல்லவா அதுபோல் தான் இவையும். அழகாக தெரிவதெல்லாம் அழகில்லை. உள்ளத்தில் அழகாக உணரப்படுவதே அழகு.

தொடர்ந்து எழுத நான் அழைப்பது இனிய நண்பர் திரு. சொல்லரசனை. ஏசு என்னச் சொல்கிறார் என்பதை அவர்மூலம் நாமறியலாமே.

அடுத்ததாக திரு. திகழ்மிளிர்.
இந்த நான்கிற்கும் நல்ல பா' எழுதுங்களேன்.

அன்புடன் உமா


கடவுள்

காரிருள் வண்ணணாம் கண்ணணை; வாழ்வினில்
காரிருள் போக்கியருள் கந்தனைக்; காரியத்தில்
வெற்றிக் கனிந்தருள்செய் வேழ முகத்தோனைப்
பற்றியே பாடுமென் நெஞ்சு.

[ என்னைப் பொருத்தவரையில் கடவுள் என்பது ஒர் உணர்வு. அன்பு, நேர்மை,காதல் போல் கடவுளும் ஒர் உணர்வு.அதை காட்ட இயலாது. தனித்தனியாக ஒவ்வொருவரும் உணர வேண்டும். உருவம் கொடுத்து நாம் வழிபடுவதெல்லாம் நம் மனதை நம்பவைக்கவே. மனம் விசித்திரமானது. அறிவியல் உண்மைகளை சுலபமாக நம்பாதமனம் சில விடயங்களை சிறிதும் அடிப்படையில்லாமல் நம்பும். மனதின் போக்கிலேயேச்சென்று மனதை கட்டுபடுத்தும் செயலுக்கு உருவவழிபாடு அவசியமாகிறது. மனதில் அன்பையூட்டும் கண்ணணும், கந்தனும், கடிகணபதியும் அனைவரும் ஒருவரே.கண்ணனாய் நினைக்கும் போது அன்பு மேலோங்குகிறது. கந்தனாய் வணங்கையில் நேர்மை நெஞ்சில் நிலைக்கிறது, கணபதியைத் தொழுதால் எண்ணியக் காரியம் முடிக்கும் திரன்வளர்கிறது.]

Thursday, August 20, 2009

காத்திடுவாய் கந்தா.

காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக்
காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகிறேன்
காட்டுன் கருணை கதிர்வேலா காகிதக்
கப்பல் கடல்கடக் க.

காகிதக்கப்பல் கடலைக் கடக்க இயலாது, அதுபோல் இவ் வாழ்க்கை எனும் கடலைக் கடக்கத் தெரியாது தத்தளிக்கிறேன். கந்தனே எனைக்காப்பாயாக!
கருவிழிக்கு வரும் தீங்கை கருவிழி தன்னால் தடுக்க இயலாது. விழிக்குக்துணை இமையே. அதுபோல் எனக்குத் துணை நீயே,எனக்குறும் பகையை கந்தனே உன்னால் மட்டுமே அழிக்க இயலும். என்னால் ஆவதிவ்வுலகில் எதுவுமில்லை. என்னை நல்வழி படுத்தி எனைக் காத்தருள்வாய் குகனே.

திரு.தமிழநம்பி அவர்கள் திருத்தியதன் பின்.
காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமை
சாத்திப் பரிவாய்ச் சலியாது ஓம்புதல்போல்
காட்டுன் கனிவருளை! கதிர்வேலா காகிதக்
கப்பல் கடல்கடக் க.

சினம்

விளக்கின் சுடரோ வெளிச்சம் தருமே
இளந்தணலின் சூடோ விலக்கும் குளிரை
சினமும் அதுபோலுன் சிந்தை அழிக்கும்
கணமும் நெருப்பாய் மிகுந்து.

[தீயானது விளக்கிலிருக்கும் போது நிதானமாய் எரிந்து வெளிச்சம் கொடுக்கும்,அதுவே சற்றே பெரிதானால் குளிரைத்தடுக்க, உணவு சமைக்க பயன் படும். ஆனால் மிகுதியான நெருப்பாய் எரியும் போது கூரையையே கொளுத்தி விடும். அது போல் சினம் தேவையான இடத்தில் அளவோடு இருந்தால் நன்மை தரும், அதுவே மிகுதியானால் நம் சிந்திக்கும் திறனை அழித்து நம்மையே கொன்றுவிடும்.]

Tuesday, August 18, 2009

மருந்து வாங்கப் போனேன்.

மருத்துவரைப் பார்த்திடவே
.........மனைவியோடு சென்றிருந்தேன்..
அருந்தவமே நான்புரிந்து
.........அங்குள்ளே சென்றேனே..
ஏறிட்டு முகம்பார்த்து
..........எழுதியதை கொடுத்துவிட்டார்..
ஏதென்று பார்க்குமுன்னே
..........இருநூறு என்றிட்டார்...
எடுத்ததையும் தந்துவிட்டு
...........எழுந்துவந்து விட்டேனே..
மருந்துசீட்டு தன்னோடு
...........மருந்தகந்தான் சென்றேனே...

சீட்டு'பார்த்து சிரித்துவிட்டு
..........எட்டுநூறு ஆகுமென்றான்..
கட்டுபடி ஆகாதே
.........கண்டபடி செலவுசெய்ய!
சின்னதொரு ஜலதோசம்
..........சீக்கிரமாய் மருந்துகொடு..
பட்டென்று என்மனைவி
...........பாய்ந்தங்கே கேட்டிடவே..
சட்டென்று சிலமருந்து
..........எடுத்தவனும் நீட்டிவிட்டான்..
சில்லறையாய் மூனுரூபாய்
............தந்தவளும் வந்துவிட்டாள்...

சோறுதண்ணி இல்லாம
.........சோர்ந்திருப்பாள் என்றெண்ணி
மாலைவந்து பார்க்கையிலே
..........மலைத்துநின்றேன் நானங்கே..
சோர்ந்தமுகம் ஏதுமில்லை
..........சோதிமுகம் காட்டிநின்றாள்..
முல்லைதனைச் சூடியவள்
...........மல்லிகையாய் சிரித்திருந்தாள்
எப்படியோ போகட்டும்
...........இருநூறு வீணாச்சே
இப்படீன்னு தெரிஞ்சிருந்தா
...........அய்யய்யோ வீணாச்சே!!!

Monday, August 17, 2009

அன்பு

என்றொருவர் துன்பென்னால் எள்ளளவும் தீருமென்றால்

அன்றெனது ஆவியையும் ஆர்த்தளிப்பேன்-இன்பவர்க்கு

என்னாலுண் டென்றாலோ எத்துனைதான் துன்பெனக்கு

என்றாலும் ஏற்றிடுவேன் யான்.

மழை

சொந்தமான மண்வெடித்து சோறுதண்ணி இல்லாமல்
பந்தமெல்லாம் வாடினது போதுமய்யா - வந்திங்கே
ஆறெல்லா நீரோட மாமழையாய் பெய்திடய்யா
ஊரெல்லாம் காத்திருக்கே வா.

வாவென்று நானழைத்த மாமழையும் வந்திங்கே
சோவென்று கொட்டுதய்யா பேய்மழையாய் - போவென்று
நான்சொல்ல போயிடுமோ? நாளெல்லாம் பெய்திங்கே
ஏன்கெடுதல் செய்கிறதோ எண்ணு.
[திரு தமிழநம்பி அவர்களின் திருத்தத்துடன்]


மன்றல் - சொல்லுக்கான வெண்பா.

மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே
மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்
மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்
மன்றல் மகிழ நினைந்து.

மன்றல் கமழும் - மணம் வீசு்ம் மலர்மாலை அணிந்து
மன்றல் மணக்க - தான் நடந்துவரும் தெருவெல்லாம் மணம் வீச
மடக்கொடி வந்துற்றாள் மன்றல் - கொடியைப் போன்ற இடையையுடைய மணப்பெண் திருமணக்கூடம் வந்தாள்.
மன்றல் மகிழ நினைந்து - அவளைக் கூடி மகிழ்வதை எண்ணியவாறே மணமகன்தானும் விரைந்து வந்தான்.
மன்றல் - மணம், நெடுந்தெரு,திருமணக்கூடம், புணர்ச்சி எனப் பல பொருள் தரும்.

படத்திற்கான வெண்பா.


மானம் இழந்தெமது மண்ணை மறந்திங்கு
வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை
இரவில்கொல் லும்அரவம், நண்பகலில் நிற்கும்
மரமும் நிழலை மறந்து.
[ ஈழத்தமிழரின்னல் இன்னும் தீர்ந்த பாடில்லை. அவர் மானம் காக்கவும் உயிரைக்காக்கவும் எவரும் இல்லை. இயற்கையும் துணைவரவில்லை. மரம் கூட தன் இலைகளை உதிர்த்து நிழலின்றி காய்க்கிறது.]

Wednesday, August 12, 2009

கண்ணா அருள்வாயா!

கண்ணன் குழலில் ஓர்துளையாய்
..........நானும் ஆக மாட்டேனோ!
மன்னன் அவனிதழ் பட்டூதும்
..........பாஞ்ச சன்னியம் ஆகேனோ!
காலம் சுற்றும் சக்கரமாய்
..........கையில் கிடக்க அருள்வானோ!
ஞாலம் போற்றும் அவனுரையில்
..........நானும் ஒருசொல் ஆகேனோ!

கத்தும் கடலும் காரிருளும்
..........கண்ணன் அழகை காட்டிடுமே
முத்தும், மணியும் அவன்மேனி
..........பட்டு ஒளிரும் நானதுபோல்
நித்தம் கலந்து மெய்ஞானம்
..........பெற்றே சிறக்க வழியுண்டோ!
சித்தம் தெளிய அவனுரைத்தான்
.........."காண்பாய் உன்னுள் எந்தனையே".

Monday, August 10, 2009

'பன்றிக் காய்சல்

பாராய் பரவுமிப் பன்றிக்காய்ச் சல்பாரில்;
தீரா சுரத்தோடு மூச்சடைப்பு - ஆறா
இருமல் சளியென்(று) இவையும் இருந்தால்
மருத்துவ ரைப்பார் விரைந்து.

தொட்டால் பரவுமிது என்பத னால்சற்றே
டெட்டாலிட்(டு) உங்கைக் கழுவு

உன்னால் பரவுதல் வேண்டாயிந் நோய்யிங்கு
என்றால், முகத்தை முகமூடி தன்னால்
கவனமாய் மூடி மருத்து வரைப்பார்
அவரையுங் கொல்லாதே சேர்த்து.

பயந்தால் போகுமோ? பீதி பரப்பும்;
தயவோடு செய்வீர் இதைத்தடுக்க - நோயால்
பாதிக்கப் பட்டிருந்தால் சேராதீர் யாருடனும்
சோதித் தறிவீர் உடன்.


[பயத்தால் பீதியடைந்து மருத்துவமனைக்கு அனைவரும் ஒரே நேரத்தில் செல்வோமானால் அங்கு ஒருவருக்கிருந்தாலும் எல்லோருக்கும் உடனே பரவும். நோயைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவோம். எனவே முகமூடியிட்டு அரசு பரிந்துரைத்துள்ள இடங்களில் நோய் இருக்கலாம் என் உங்கள் மருத்துவர் சந்தேகித்து பரிந்துரைத்தால் மட்டும் பரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்காமல் மாத்திரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.பக்க விளைவுகள் மிக அதிகமாய் இருக்கும்.]

சர்க்கரை ஆஸ்துமாவோ(டு) இரத்த அழுத்தமென்றால்
அக்கரை வேண்டும் அதிகமாய் எக்கணமும்
சின்னஞ் சிருவர் பெரியோர் தமைசற்றே
கண்ணுங் கருத்துமாய் கா.



Sunday, August 09, 2009

நட்பு

இன்பம் கொடுத்து இரண்டாக்கி, வாழ்வினில்
துன்பம் பகிர்ந்தே துடைத்தெடுத்து -என்றும்
கடிந்துறு சோர்வில் சுடராய், தவறை
இடித்தும் உரைப்பதே நட்பு.

விளக்கம்: வாழ்வின் இனிமைகள் மேலும் மேலும் வளரும் வண்ணம் நட்புடன் கூடி, துன்பத்தை பகிர்வதன் மூலம் அதனை இல்லாததாக்கி , நம் வாழ்வில் என்றும் விரைந்து நம்மை ஆட்கொளளக்கூடியதான சோர்வு நம்மை அடையாவகையில் இருளைநீக்கும் சுடராய் நம் சோர்வை நீக்கி, தவறு செய்யும் போது கண்டித்துக்கூறியும் நம்மை நல்வழிபடுத்துவதே சிறந்த நட்பு.

தன்நலஞ் சற்றே தவிர்.

விண்நோக்கும் வேறுபொருள் காணும் விழியிரண்டின்
கண்மணிகள் தன்னைத்தான் பார்த்ததுண்டோ -மண்மீதில்
என்நலந் தான்பெரி தென்னும் மடநெஞ்சே
தன்நலஞ் சற்றே தவிர்.

விளக்கம்: வானம் போல் உயர்ந்தவற்றை பார்க்கும் கண்மணிகள் தங்களை தானே பார்ப்பதில்லை. அவ்வாறே மனிதனும் பிறர் நலம் காணவேண்டுமேத் தவிர தன்நலம் காணுதல் தவறு.

இன்பமும் துன்பமும்

காலை மலரும் மலர்கள் உலர்ந்தவையே
மாலையில் வீழ்ந்திடும்,வாழ்வெனுஞ் சோலையில்
என்று மதுபோல் இரண்டறச்சேர்ந் தேயிருக்கும்
இன்பமுந் துன்பமு மே.

[பாரசீக கவிஞர். உமர்கய்யாம் பாடல்களை படித்ததின் தாக்கம்]
விளக்கம்: காலையில் மலரும் மலர்கள் மாலையானல் உதிர்ந்து வாடிவிடும்,ஆனாலும் காலையி்ல் மீண்டும் மலர்கள் மலரும். அதுபோல் மனிதன் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறிமாறியே தோன்றும். எதுவும் நிலையானதல்ல என்பதால் இன்பத்தில் இறுமாப்படைவதும் துயரில் துவண்டுவிடுதலும் கூடாது. சமமாக பாவித்தால் நிம்மதி இருக்கும்.

Saturday, August 08, 2009

தொடர்வண்டிப் பயணம்

தொட்டிலாய் ஆட்டமிகச் சூடாய்க் குளம்பிவடை;
பெட்டிபல கோர்த்ததொடர் வண்டிப் பயணத்தில்
கூட்டமாய் மக்கள்;கொண் டாடும் குழந்தைகள்
வாட்டமுற செல்லும் பிரிந்து.

[திரு.அமுதா மற்றும் திரு.தமிழ் நம்பி அவர்களின் ஏகப்பட்ட திருத்தல்களுடன்.]

Friday, August 07, 2009

காதல்

இன்னிசை வெண்பாவில்

என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்
உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது;என்னெதிர்நீ
மண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னிரு
கண்ணில் வழியு மது.

Wednesday, August 05, 2009

கோமணம்.

கோமணம் என்ற சொல்லுக்காக எழுதியது.

அறுசுவையுண் டிக்கோ மணம்நாவுக் கோமணம்
காற்றுக்கோ மணம்நாசிக் கோமன மாசைத்
துடைத்தொரு கோமணங்கட் டும்ரமண ருக்கோ
மணமுண் டறிவாய் மதி.

ஐம்புலங்களால் நாமுணர்வதெல்லாம் உண்மையானதலல,ரமணர் காட்டும் உண்மை பொருளுக்கே உண்மையான மணமுண்டு.

திரு.அவனடிமையார் இன்னும் அழகாக விளக்கமளித்துள்ளார். அவர் சொல்லிலேயே,' சடலத்துக்கு இல்லாத மணத்தை,உறங்கும் போது உயிர்த்திருந்தும், புலனுறுப்புக்கள் இருந்தும் அறியாத மணத்தை,விழித்ததும் எப்படி அறிகிறோம்? உள்ளே 'நான்' எனும் உணர்வாக ஒளிரும் பகவானுக்கே மணம்'


இன்னல் அகலும் இனி

தன்னந் தனியாய் எனைவிட்டுத் தாய்வீட்டில்
உன்னை யிருத்திய 'ஆடி'போயிற் றேசிறு
மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம்
இன்னல் அகலும் இனி.

பாவும் தமிழுமினி பாழ்

நலங்குன்றி நாடோறும் தேயும் தமிழை
விலக்கியிங்கு வேறு மொழிபேச-இலக்கின்றி
யாவு மழியும் பிறசொல் புகுந்தாலோ
பாவும் தமிழுமினி பாழ்.

திரு. அறிவுமதியின் கவிதையை வெண்பாவாக்கும் முயற்சி

நெருப்பேற்ற பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்
வஞ்சத்தால் வாய்மை யிழந்தான் பெரும்புகழ்
அப்பஞ்சேற் றத்தீயாய் நின்றொளி வீசுமுண்மை
நெஞ்சத்தான் செய்த வினை.

குறள் வடிவில்

நெருப்பிட்ட பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்
பொய்யிட்டுச் சேர்த்தான் புகழ்.

பழிக்கும் செயலான் பெரும்புகழ் காலம்
அழிக்கும் விழலாய் விரைந்து.

Wednesday, July 29, 2009

ஈயூர இல்லை இடம்

சாலையெங்கும் வாகனம் சேரும் பெருங்கூட்டம்
காலைமாற்றி வைக்கயிட மின்றிஞாயி[று] மாலையில்
வாயூறும் பஜ்ஜி வகையாய்,-கடற்கரையில்
ஈயூர இல்லை இடம்.
[நம்ம மெரீனா கடற்கரை ஞாயிறு மாலையில் தரும் காட்சி]

Tuesday, July 28, 2009

படம் சொல்லும் பாடல்

[திரு அமுதா கொடுத்த படத்திற்கான வெண்பா]
[கட்டிடக் காடாகிவரும் சென்னையில் இப்பொழுது ஆங்காங்கே சாலையோரப் பூங்காக்கள் அமைக்கிறார்கள். சாலையோரமென்பதால் வாகன சத்தமும்,இடிபடும் அபாயமுமுண்டு. அப்படிப் பட்ட ஒரு பூங்காவிற்குப் பசுமை ஈர்க்க பறந்து வந்துவிடுகிறது ஒரு குருவிக்குஞ்சு. சென்னையின் சகல வித்தைகளையும் அறிந்த பூனை தாயுள்ளத்தோடு சொல்வதாக ஒரு கற்பனை]


கட்டிக் கரும்பே!கேள் வேண்டாம் பிடிவாதம்

எட்டியந்த மின்சாரக் கம்பியிலுன் கூட்டைச்சேர்

பேரபாய முண்டேயிப் பாதையோரப் பூங்காவில்

வேறுபாய மில்லை உணர்.

Monday, July 27, 2009

குறும்பட வெண்பா.

தலைவாரிப் பூச்சூடி கைக்குலுங்க மைதீட்டி
வானவில் லாடை விழிவழியும் எண்ணக்
கனவோடு கண்ணாடி முந்தோன்றக் காராடை
மூடியத வள்மன து.

குறும்படம் காண
http://www.youtube.com/watch?v=O9Ukt5-rXls



மற்றொறு வெண்பா

கட்டுமோ செங்கதிரைச் சின்னதொரு நூற்கயி(று)

எட்டுமோ யென்மனதை யிவ்வாடை -ஒட்ட

எனதுடல் போர்த்தவே யில்லைமறுப் புங்கள்

மனதிலுள்ள் தேகறுப் பு.

Friday, July 24, 2009

"வானம்" அல்லது "மேகங்கள்"

கருத்தமுகில் வாராமல் வெங்கதிரா லிங்கே
வெடித்து நிலமும்பா ழாகக் கரைபடிந்த
மூடமிலேச் சன்போல் கொடுக்க மனமின்றி
வான மிருக்கே வறண்டு.

திரு. இராச குருவின் வானம் அல்லது மேகம் தலைப்பிற்கு எழுதியது.
[சென்னையில் இப்படித்தானே இருக்கு வானம்?]
திரு அமுதாவின் வருத்தம் பாவாக

அழைத்தால் வருமோ அருந்தமிழர்க் குத்தீங்
கிழைத்தல் தகுமோ இழையாய்! -பிழைத்தார்
வடவர் அதனால் மழைவாரா தங்கே!
கிடந்தூர்க அன்றாடங் கெட்டு!

திரு அமுதாவின் வருத்தம் நியாமனதாக் இருந்தாலும்

ஓர்தாலி போனதற்(கு) ஊர்தாலி கொண்டதும்
ஒவ்வாதென் றாயுண்மை; ஆயின் ஒருவரால்
மற்றவர் துன்புறலா மோ'புவியில் நல்லார்
ஒருவர் உளரேல் அவர்பொருட்டெல் லார்க்குமழை'
என்றவோர் கூற்றை மறந்து மனமுடைக்கும்
சொல்லால் சுடுதல் தகுமோ? பிழையிங்கே
ஒருபுறம் பாவம் மறுபுறமோ? தாய்வாட
மைந்தன் மகிழ்வதுவோ? மண்ணுலகில் மாமழை
வேண்டும் மனிதம் செழிக்கமன தாலும்
வசைச்சொற்கள் வேண்டாம் விலக்கு!

என்ற என் ஆதங்கத்திற்கு அமுதாவின் இனிமையான பதில்

பகலில் நிலவினைப் பார்ப்பரி தற்றால்*
வெகுளி* மிடுதியால் மெய்யறிவு கெட்டேன்;
செறிந்த கவிபுனைந்து சேயிழையே!நன்றாய்
அறைந்தீர் இளையோன் அதுகொண்டேன்;வன்சொல்
விலக்கென்றீர் தோழீ! விரைந்தேற்றேன்;இன்சொல்
இலக்கன்றோ யார்க்கும்?! இதனை யுணராது
யாரோ சிலபேர் இழைத்த இடுக்கண்ணுக்(கு)
ஊரே பொருப்பென்(று)உரைத்தேன் இதுதவறே;
'நாயாற் கடியுற்றார் நாடியந் நாயைத்தன்
வாயாற் கடித்த வழக்கில்லை'என்னுங்கால்
எய்தோர் இனித்திருக்க அம்பதனை நோதல்போல்
வைதேன் வசைச்சொல்லால் வையத்து மக்களை;
ஆள்வோர் பிழைத்தால் அருங்குடிகள் என்செய்வார்?
ஆள்வோரை விட்டிங்[கு] அடுத்தவரை நொந்தேனே!
அய்யோ!பிழைசெய்தேன் அம்மா!வெகுளியால்
மெய்யறிவு கெட்டேன்;விரை*தங்கு செய்யமலர்
மீதமர் மாதே! விளம்பக்கேள்! தோழனிவன்
நாத்தழும் பேற்றி நவின்றவுரை தீய்த்தற்கு
மன்னிக்க வேண்டுகிறேன் மாமழையாய்க் கண்ணீரை
அன்புடையுன் தாளுக்[கு] அணிசெய்தேன் அன்றீன்ற
தாயைப் பழிப்பதுவும் தாய்மண்ணைச் சாடுவதும்
தீயிற் கொடியதோர் செய்கை எனத்தேர்ந்தேன்
பெய்கமழை யே!நான் பிறந்தநந் நாடுவளம்
எய்யப் புயலே* எழு.


பார்பரிது அற்றால் -பார்ப்பதற்கு அரிது போல [ஆல்-ஓரசை];வெகுளி-கோபம்;விரை-மணம்;புயல்-முகில்.

அமுதாவின் வேண்டுகோளுக்கிசைந்தாள் அன்னை.

சேய்செய் சிறுபிழை தாய்மறந் தாளிங்கே,
செந்தமிழ்த் தாயின் தவப்புதல்வா, உன்னினிய
நற்றமிழ்ப் பாவால் நலம்கண்டா ளன்னை
வரமாய் பொழிந்தாள் மழை.

[வழக்கம் போல் என் வெண்பாக்களில் பிழைத் திருத்தி, பதிலளித்தும், என்னை இந்த அளவிற்கு வெண்பா எழுதவைத்து,வலைச்சரத்தில் என்னை வெகுவாகப் பாராட்டியும் எனக்கு ஊக்கமளிக்கும் திரு.அமுதாவிற்கு நன்றியுடன்]








Friday, July 17, 2009

சொல்லே மிகவும் சுடும்.


கல்லே மனதாய்க் கனிவாய்க் கரும்பினிய

சொல்லே தவிர்த்து சுடுந்தீயோ வாளோ,கூர்

வேல்தானோ கொல்வில்லோ என்றஞ்சக் கண்ணால்சொல்

சொல்லே மிகவும் சுடும்.


[தலைவன் மேல் தலைவிக்கு ஏனோ கோபம். அதனால் அவனைப் புறக்கணித்து வாய்ச் சொல் தவிர்க்கிறாள். ஆனாலும் கண்ணால் தன் கோபத்தைக்காட்ட, தலைவன் கூற்று.]

Thursday, July 16, 2009

திரு.அகரம் அமுதா அவர்களின் பதிவில் பின்னூட்டங்களாக எழுதிய சில வெண்பாக்கள்.


நம்மை பெற்று வளர்த்து இந்த பூமியை நமக்கு விட்டுத்தந்த நேற்றய சமுதாயமும் நடுத்தெருவில் வீழ்ந்திருக்க நாம் காக்க வேண்டிய நாளய சமுதாயமும் நலிந்திருக்க இன்றய சமுதாயம் சாதித்தது என்ன? இப்படி பலர் நலிந்திருக்க நாம் உண்டு உடுத்தி வாழ்வது வெக்கமாகவும் வேதனையாகவும் உள்ளது. மனித்தன்மை செத்துவிட்டதா? அதன் இலக்கணம் தான் மாறிவிட்டதா?

மெத்தப் படித்தும் பயனில்லை முன்னவர்
எத்தனையோப் பட்டும் புரியவில்லை நித்தமிங்குப்
போரை விரும்பிப் புரிந்திடுவார் பூமியில்
யாரைத்தான் நோவதோ போ.

மண்ணுற்ற சோகம் மனம்சுட்ட துண்மையே;
கண்ணுற்ற போது கவியெழுத சொல்லில்லை
சோர்வுற்ற நெஞ்சின் துயர்களையக் கற்ற
தமிழன்றி இல்லை துணை


வட்டில் உணவில்லை வாடி எலும்புடன்
ஒட்டிய தோலில் உடையில்லை கத்தி
அழுமோசை காதில் விழவில்லை செத்து
விழுந்திடுதே செய்கையிலா நெஞ்சு.

இன்னல் அகன்று இனிதாய் இவர்வாழ
மின்மினிகள் கைக்கோர்த்து கண்ணோ[டு] விளையாட
கற்று உயர்ந்திவர் காதலித்த றம்நாட
கற்பனைச் செய்திடுதே நெஞ்சு
.

வயதொன்றே காரணமாய் வாழ்த்துகின்றேன் நற்றமிழை
நாடகத்தில் நாட்டியே முத்தமிழின் முத்தெடுப்பாய்
நற்கவியாம் உம்பணியை நாமகளும் நாடுகின்றாள்
இல்லை உமக்கே யிடர்.

அமுதாவின் தமிழ் பற்றும், அவரது பணியையும் வாழ்த்தி எழுதியது.


நாணுகின்றேன் நற்றமிழில் நீரெனையே ஓர்கவி
என்றதனால், நாடுகின்றேன் உந்தனையே நற்கவியை
நான்புனைய நல்லிலக்க ணங்கற்பிக் கும்நீர்
எனக்கே இராச குரு.

Add Video
யாப்பிலக்கணத்தோடு சொல்லிலக்கணமும் கற்பிக்கும் திரு.இராச குரு அவர்களுக்கு வணக்கத்துடன்.


எங்குற்றாய் என்றீர் தமிழின் இனிமைப்
பயின்றிட காத்திருக்கி றோமிங்கு நன்றாம்
பிரவா கமென்னு மிலக்கண நண்பர்
குழுப்பக்கம் சற்றே திரும்பு.

[பிரவாகம் குழு பக்கம் அமுதா வராது போனதால்]

Friday, July 10, 2009

கடவுளைக் கொல்லாதீர்

தீயின் வெம்மை -கடவுள்;
நீரின் நீர்மை -கடவுள்;
பெண்ணில் தாய்மை -கடவுள்;
கண்ணில் பார்வை -கடவுள்;
மண்ணின் உயிர்ப்பே -கடவுள்;
விண்ணின் விரிப்பே -கடவுள்;
நெஞ்சில் நேர்மை -கடவுள்;
நினைவில் கருணை -கடவுள்;
எண்ணம் கடவுள்;
எழுத்தும் கடவுள்;
எண்ணிப் பார்த்தால்
நீயும் கடவுள்,
நானும் கடவுள்;
ஆதலால் உலகத்தோரே!
தீயில் நன்மைக் காண்பீர்
நீரின் தன்மைக் கொள்வீர்
நெஞ்சில் தாய்மைக் கொண்டே
மண்ணில் உயிர்கள் காப்பீர்
தன்னில் தெய்வம் கண்டால்
மண்ணில் மனிதம் வாழும்.

Wednesday, July 08, 2009

எழுத்துப் பிழைநீக் கியன்று!

மண்முத லாய்ப்பிறந்து குன்றாப் புகழினோ(டு)
எண்ணிலடங் காரிதயத் தில்காத்தி ருந்து,களை
நீக்க இலக்கணம் கண்டே இலக்கியமும்
பெற்றதாம் சீரிளமைச் செந்தமிழ்த்தன் பண்டைச்
சிறப்போடு கண்ணியு கம்தாண்டி யென்றும்
தழைக்கத் தமிழா! தமிழ்பேசு; முற்றாய்
எழுத்துப் பிழைநீக் கியன்று!

திரு அகரம் அமுதாவின் 'வெண்பா எழுதலாம் வாங்க' பதிவில் எழுதியது. திரு. அமுதாவின் சில திருத்தங்களுடன் இங்கே.

Saturday, June 27, 2009

மனம்மயக்கும் மாயத் தமிழ்

தேனினிக்கும் செந்தமிழால் நாவினிக்கும் ஏடினிக்கும்
இன்தமிழை நாமெழுத, வாழ்ந்திருக்கும் நற்றமிழும்
நாம்படிக்க, காப்பதற்கே தாமதமேன் கற்போம்
மனம்மயக்கும் மாயத் தமிழ்.

திரு.அமுதா அவர்களின் 'வெண்பா எழுதலாம் வாங்க' பகுதியில் எழுதியது.

Wednesday, May 13, 2009

எதிர்பார்க்கிறோம்

திரு அமுதா அவர்கள் குறள் வெண்பாவிலான சிறுவர்களுக்கான 'மழலை மருந்து' என்ற நூல் ஒன்றை வெளியிட இருக்கிறார்.மிகக் குறைந்த கால அவகாசத்தில் எழுதியிருக்கிறார். அவரது நூல் மிகச்சிறப்பான முறையில் வெளிவர வாழ்த்துகளுடன்.....

சீறாய் சிறுவர்தம் சிந்தை சிறந்திட
நேராய் சிலசொல்லை சேர்த்திங்கு என்றுமே
மாறாத பண்பை மனதில் பதித்திட
தாராய் 'மழலை மருந்து'.

தண்ணெண மாறும் தழல்

அங்கமெல்லாம் ஆறாக அக்கினிதான் சுட்டாலும்
தங்கமெல்லாம் தானுருகி ஓருருவம் கொண்டதுபோல்
கண்மணியே என்னெதிரில் சேயுனைக் கணடதுமே
தண்ணெண மாறும் தழல்.

Thursday, May 07, 2009

ஈழத் தமிழா எழு

பொன்னும் பொருளுமே போனால் பெரிதில்லை
கண்ணெதிரே மானம் இழந்திங்கு பெண்மையே
வீழ பயந்தது போதும் வெறியொடு
ஈழத் தமிழா எழு

மெய்யடா மெய்யடா மெய்

இலங்கையில் நடக்கும் அட்டூழியங்கள் கண்டு மனம் கொதிப்பது உண்மை.

போரை நிறுத்துவதாய்ப் பொய்சொல்லிப் பல்லோரின்
கூரை பெயர்த்துதறி பெண்ணைக் குதறும்
நயவஞ் சகமெண்ணி நெஞ்சம் கொதிப்பது
மெய்யடா மெய்யடா மெய்.

[திரு.அமுதா திருத்திய சில மாற்றங்களுடன்]

கூட்டனி யாருடனோ கூறு

அரசியல் இல்லா கூட்டனியிது.

சின்னத்தி ரைசினிமா சீரழிக்கும் சூது
கணமழிக்கும் தீப்பழக்கம் போதை புகையிவை
தன்னில் மனம்துலக்கும் புத்தகத்தோ டன்றிகற்றோர்
கூட்டனி யாருடனோ கூறு.

உழவின்றி உய்யா[து] உலகு

அமுதா அவர்கள் கொடுத்திருந்த ஈற்றடி கொண்டு சில வெண்பாக்கள்

கருவிகலை செய்தொழில் யாவும் புகழ்தரலாம்
மாந்தர் உறுபசி தீர்க்க உடல்வளைத்தே
ஏழை விதைத்தநெல் போலாமோ ஏற்பீர்
உழவின்றி உய்யா துலகு

ஈகலப்பை கொண்டு எழுதியே வந்தாலும்
ஏர்கலப்பை இல்லா தியலுமோ மண்ணில்
பசித்தவுயிர் 'பா'எழுது மோபசி தீர்க்கும்
உழவின்றி உய்யா துலகு.

Tuesday, April 28, 2009

பட்டாம்பூச்சிக்கு bye bye

வண்ண சிறகசைத்து
வட்டமிடும் வண்ணத்துப்பூச்சியே, என்
எண்ண இதழ் விரித்து
மலர்ந்திருந்த
கவிதை பூக்களில் நீ
தேனை மட்டுமா அருந்திச்சென்றாய்
சில மகரந்தங்களையுமல்லவா
தூவிச்சென்றிருக்கிறாய்.

எத்தனை பூக்களை
அறிமுகம் செய்துவைத்திருக்கிறாய்.

என் கவிதைகளில்
வாசம் விட்டுச்செல்லும்

வண்ணப்பூச்சியே
உன்னை வழியனுப்ப
மனதில்லைதான்..
என்றாலும் சென்று வா...
ஆனால்
மறுபடியும் வா
உன் அரும்பசி தீர
சில அரிய மலர்களில்
தேன் நிரப்பி
தருகிறேன்.

இப்போது
அன்புடன் போய்வா...

இந்த பட்டாம் பூச்சியை நான் அனுப்புவது


பூக்களையும், பட்டாம் பூச்சிகளையும், கண்ணாமூச்சி விளையாட்டுகளையும் மறந்து பதுங்கு குழியில் பயந்திருக்கும் பிள்ளைகளின் அவலத்தை தன் கவிதைகளில் கண்முன்னே காட்டும் திரு. தீபச்செல்வன் [
http://deebam.blogspot.com/] அவர்களின் தோட்டத்திற்கு. கவிஞர் தீபச்செல்வன் ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். இவரது 'பதுங்குக்குழியில் பிறந்த குழந்தை 'புத்தகத்தை கண்காட்சியில் வாங்கியதன் பின்பே இவரது வலைப்பதிவைப்பார்த்தேன். நெஞ்சை உலுக்கும் இலங்கை தமிழர் படும் அவதிகள் புகைப்படங்களாகவும் கவிதைகளாகவும் இவரது பதிவில். இவருக்கு இவ் விருதை வழங்குவது ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பை நேசிக்கும் ஒரு வாசகியின் காணிக்கையாகத்தான். அவர் இதை ஏற்றுக்கொண்டால் பட்டாம்பூச்சி விருது பெருமை பெரும்.

அடுத்ததாக அகரம் அமுதா [http://agaramamutha.blogspot.com/] அவர்களுக்கு
வார்ப்பு இதழில் வெளியான இவரது கவிதைகள் மூலம் எனக்கு அறிமுகமானவர். சிறந்த மரபு கவிதைகள் எழுதக்கூடியவர். இவரது 'வெண்பா எழுதலாம் வாங்க' பகுதியில் எளிமையாக வெண்பா இலக்கணம் கற்றுக்கொடுத்திருப்பார்.மிக அற்புதமான ஆசிரியர். இவரது தமிங்கிலிஷ்.காம்,இலக்கிய இன்பம், அகரம் அமுதா ஆகிய வலைத்தளங்கள் இவரது மற்ற முகங்களை அடையாளம்காட்டும். இவரது ஊதுபத்தி கவிதை மிக இனிமையானது. இவரது கவிதைகளை புத்தகமாக வெளியிட எண்ணியிருக்கிறார். அவர் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.ஆவலுடன் காத்திருக்கிறோம். இவருக்கு இந்த விருதை குரு தட்சினையாக வழங்குகிறேன். ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சியடைவேன்.

அடுத்ததாக தோழி ஹேமா [
http://kuzhanthainila.blogspot.com/] பின்னூட்டங்கள் வழியாக இவரை அறிந்தேன். யாழ்பாணத்துக்காரர். தன் தேசத்து துயரைத் தன் கவிதைகளில் வழியவிட்டிருப்பார்.ஊடகங்க்கள் மூலம் நாம் காணும் இலங்கை வேறு. தோழி ஹேமா மற்றும் திரு.தீபச்செல்வன் காட்டும் இலங்கை வேறு.இவருக்கு இவ் விருதைத்தருவது இவர் தேசத்து மக்கள் வாழ்வில் மலர்கள் மலரவும், மலர்தோறும் பட்டாம்பூச்சிகள் வட்டமிடவும்,பதுங்க்கு குழிவிட்டு குழந்தைகள் பள்ளிக்கூடம் போகவும் இறைவனை பிரார்த்தித்த படி.
அதுமட்டுமல்ல இவரடு இன்னொறு வலையான உப்பு மடச்சந்தியில் தோஸ்து சென்னைத்தமிழை ஆராய்ந்து தூள் கிளப்பியிருப்பார். அதற்காக டாக்டர் ? பட்டமெல்லாம் பெற்றிருப்பார். நாமும் இந்த விருதை கொடுத்து வைப்போமே.
எனக்கு பட்டாம்பூச்சியை அறிமுகப்படுத்திய திரு.சொல்லரசனின் [
http://sollarasan.blogspot.com/] வலைமூலமாகத்தான் பல வலைப்பக்கங்களை புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. என் பதிவுகளில் பின்னூட்டமிட்டு எனக்கு உற்சாகமூட்டினார். அவருக்கு நன்றியுடன் பட்டாம்பூச்சிக்கு bye,bye.

















Thursday, April 23, 2009

பட்டாம்பூச்சி விருது

பட்டாம்பூச்சியை என் தோட்டத்தின் பக்கம் பறக்கவிட்ட திரு.சொல்லரசன் அவர்களுக்கு மிக்க நன்றி. எனது வலைப்பக்கம் எனது குறிப்பேடு மாதிரி, நான் மட்டுமே எழுதி படித்து வந்தேன். சமீபகாலமாக பல நண்பர்கள் வருகைத்தருவதும் பின்னூட்டமிடுவதும் எனக்கு ஆச்சரியமானதே. மகிழ்ச்சியும் கூட. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலும் மேலோங்குகிறது. ஆனாலும் இந்த பட்டாம்பூச்சி கொஞ்சம் பாவம் தான். பல அரிய [வலைப்] பூக்களைஎல்லாம் பார்த்த பின் என் சின்னச் செடிகளில் சற்றே ஏமாறலாம். இருந்தாலும் சிறிதேனும் என் கருத்துத்தேனை பருகுமாயின் மகிழ்ச்சியடைவேன்.

Thursday, April 09, 2009

காலணியும் கதைச் சொல்லும்

நடந்து வரும் காலணியே நீ
பறந்து வர நேர்ந்ததென்ன?

பேசாத வாய்திறந்தே நீ
சொல்லுகின்ற செய்தி என்ன?

வேடிக்கை இல்லையிது
என் வேதனையைச் சொல்லிடுவேன்.

எத்தனையோ கூட்டத்தில்
காலடியில் நான் கிடந்தேன்..
கட்டுண்டு இருந்ததனால்
கருத்துச் சொல்லாமலே
நானிருந்தேன்...

கரடு முரடு பாதையிலே
காலைக்காத்து நிற்கையிலே
அத்தனை சோகத்தையும்
அறிந்துக் கொண்டு
தானிருந்தேன்...

ஒருவன் செய்த
குற்றத்திற்கு
ஓரினமே அழிவதென்றால்
வீழும் சனநாயகம்
விரக்தியினால் சொல்லுகின்றேன்

பாழும் ஊழல்
பறித்ததன்று ஓருயிரை....
எனின்
வீணே ஓரினமே
சாகத்தூண்டிவிட்டார்
என்றாலும்
ஆகாதிவர் மேல் குற்றமில்லை
என்றே அறிவித்தது
அடுத்த ஊழல்

பட்டது பணக்காரரென்றால்
பத்தி பத்தியாய் எழுதுகின்றார்
பாரையே திரும்பி
பார்க்கச் செய்கின்றார்...

பொல்லாத அரசியலில்
ஓரினத்தையே
ஓட ஓட விரட்டி
தலைப்பாகை தனைக்கண்டால்
தலையையே
வெட்டி வீழ்த்தி,
மொட்டையடித்து
வெறியாட்டம் ஆடியவர்
வெகுளியாய் அறிவிக்கப்படுகிறார்.

பதவியிலிருப்போர்
பதிலளிக்காது
பார்வையைத் திருப்புகிறார்..

பதைப்புடன் நானிருந்தேன்
பதிலளிக்க மாட்டாரா?
பட்டதோர் வேதனை
பாரரிய வேண்டாமா?

ஓட்டு கேட்கும் வேளையிது
விட்டுவிட்டால்
நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை

தன் இனமே அழிந்தாலும்
உணர்வின்றி ஓய்ந்திருக்க
நானென்ன
தமிழன் காலடிச் செருப்பா?

சீரிப்பாய்ந்து விட்டேன்
சீக்கியர் சிரம் காத்து
சினம் சொல்லி
செயலிழந்தேன்..

என் துணை
நானிழந்தாலும்
எத்துணை
இழந்தாலும்
சொற் துணை இன்றி
நான் சொன்ன சொல்
சீக்கிரமே உணர்ந்திடுவர்..

காலணிகள்
பறக்க ஆரம்பித்தால்
பாரதம்
தலைக்கவிழும்
சிந்திப்பீர்...

Friday, March 27, 2009

அணுவாற்றல் வேண்டும் அறி

அகரம் அமுதா அவர்களின் 'அணுவாற்றல் வேண்டாம் அகற்று' என்ற வெண்பாவிற்கு பின்னூட்டமாக எழுதியது.

*மேற்கின் அடிவீழ்தல் இல்லையிது காண்பாயே

ஏற்கின் கிழக்கும் உயர்ந்திடுமே -மேற்கு

கிழக்கிரண்டும் கைக்கோர்த்தே வையம் சிறக்க

அணுவாற்றல் வேண்டும் அறி.


*நம்பி விழுவதிங்கு நாமல்ல நம்திறமை

கண்டவரே வந்திட்டார், மாறும் உலகிலிவர்

வல்லார் இவரல்லார் என்பதெல்லாம் நன்காம்

அணுவாற்றல் வேண்டும் அறி


*வல்லார் அவரென்று வீணர் நினைத்திருக்க

பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமை

ஒன்றாய் இணைந்தே உலகம் விளங்க

அணுவாற்றல் வேண்டும் அறி

Sunday, March 22, 2009

கண்ணாடி என்செய்யும் காலணிதான் என் செய்யும்....

கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
முன்னாடியவர்
சொன்ன சொல்
மதியிழந்தோர்
மறந்தனரே
காந்தியோடு
போயிற்றே
நேர்மையும் :-உண்மை
அஹிம்சையும்...


கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
பைநிறைய
பொருள்வேண்டி
பெரும் புகையை
கிளப்பிவிட்டார்..
போதைப் பொருள் விற்ற
பெரும் பணம்தான்
கையிருக்க
புகழ் போதை
தனை வேண்டி
போயதையும்
வாங்கிவிட்டார்...


கண்ணாடி என்
செய்யும்
காலணிதான்
என்செய்யும்
ஏழை ஒருவன்
புல் தின்று பசியாற
வானம்பார்த்த விவசாயி
கடனேறி தலைவீழ
வரி ஏய்ப்பு செய்தவரோ
ஊழல் பல செய்தவரோ
வெட்கமின்றி
உலாவர
கொலை கொள்ளை
அத்தனைக்கும் வழிவிட்டே
சட்டம் போட்டு
காத்திருக்கும்
சமதர்ம சுயாட்சிச்
சமுதாயம் தன்னில்


கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
முன்னாடியவர்
சொன்ன சொல்
மதியிழந்தோர்
மறந்தனரே
காந்தியோடு
போயிற்றே
நேர்மையும் :-உண்மை
அஹிம்சையும்

Friday, March 20, 2009

காதல்

அவளிருப்பு
அவனிதயத்திலும்
அவனிருப்பு
அவளிதயத்திலும்
பட்டாம்பூச்சி
பறக்கச்செய்யும்


தாழ்ந்த விழி
தரை நோக்க
தனித்தியங்கும் நெஞ்சம்
வானவில் பார்க்கும்


பூ விதழ்
புன்னகை வீச
பூகம்பம் வெடிக்கும்
இதயத்தில்


இளமைக்காதல்
இனிமையாயிருக்கும்
உண்மையாயிருந்தால்


மெய்யாயிருந்தால்
மெய்தாண்டி
உயிர்த்தொடும்


கட்டில் தாண்டியும்
கரம் சேரும்


காலம் கடந்து
காலன் வென்றாலும்
கவிதையாய்
உயிர்த்திருக்கும்

Tuesday, March 17, 2009

கோடை விடுமுறை

மாமா வீட்டில்
மாம்பழத்திற்கும் சண்டை
மஞ்சள் பலூனுக்கும் சண்டை..
பொம்மையோ புத்தகமோ
பொழுதுக்கும் ஆரவாரம்..
ஒரு மாதமாய்
கவலையில் அம்மாக்கள்....
கழிந்ததும்
ஒன்பது மாதமாய்
கவலையில் குழந்தைகள்..
அடுத்த கோடைக்காக ஏங்கி....

அக்கரைப் பச்சை

கூலித் தொழில் செய்யக்
கூப்பிட்டார் அதை
நாடி நம்சனங்கள் சென்றனரே!

ஏர் ஓட்டிச்செல்லும்
தொழில் மறந்து
கார் ஓட்டிச் செல்ல
மனம் விழைந்து
காலநேரம் தனை இழந்து
கணிணி முன்னே
கண் இழந்தனரே...

வீட்டை விற்றே
படித்த பிள்ளைகள்
நாட்டை விட்டே
பறந்தனரே...
சோற்றை உண்ட
கையாலே விஷக்
'கோக்'கை குடித்து
களித்தனரே...

கதை கவிதை
கற்பனை களிப்பினை
காசு பணத்தில்
மறந்தனரே...
குடும்பம் கோயில்
கலாச்சாரம்
குதூகலத்தை
இழந்தனரே...

கண்டோம் அவர்நிலை
பரிதாபம் அவர்க்கு
காதல் கூட கட்டாயம்
கண்ணித்திரையில்
'சாட்' செய்தே
காதல் கூட
கைக்கூடலாம்
குடும்பம் நடத்தல்
கூடுமோ?...

பாவம் அவர்தொழில்
படுத்தாச்சு
பாதிபேர் வேலை
போயாச்சு..
ஏறும் ஏற்றம்
பெரிதானால்
வீழும் வீழ்ச்சியும்
பெரிதாமே....

உழைப்பை மறந்து
போனதனால்
உடல் நலங்குன்றிப்
போயினரே...
உணர்வோம் இதனை
இப்போதே
உழைப்பை எள்ளி
நகையாதே

படித்த படிப்பை
நாட்டிற்கே
பயன்படச் செய்வோம்
இந்நாளே..
திறமையுடன் நற்
தொழில் செய்தே
உற்பத்தி திறனைப்
பெருக்கிடுவோம்...

உலகில் தொழில்கள்
எல்லாமே
உழவை நம்பி
உள்ளதனால்
உடலின் உழைப்பை
தள்ளாமல்
ஊக்கம் கொள்வோம்
உறுதியுடன்...

நாட்டின் நிலமை
சீராக
நாடி தொழில் பல
செய்திடுவோம்.
வரப்புயர
நீர் உயரும்
நீ உயர
நாடுயரும்
நாடுயர
நாம் உயர்வோம்...
நன்றாய் இதை
நாம் உணர்வோமே....